März 29, 2024

மருத்துவ பீட குழப்பம்:யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ஆரம்பம்?

கொரோனா தொற்று தொடர்பில் ஆய்வுகளை செய்து உறுதிப்படுத்திவரும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூட கருவிகளது இயங்கு திறன் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டு வருகின்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்படும் மாதிரிகளும் இங்கு உள்ள ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் கடந்த ஒரு வார காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருவர் மட்டுமே கொரொனோ தொற்றுக்குள்ளாகியிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.