März 29, 2024

சகோதரனால் சிறுமிக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு முறை இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று (4) கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

’14 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்தது. அதுதொடர்பில் சிறுமியால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சிறுமியின் சகோதரரான (19-வயது) இளைஞனும் சிறுமியின் மாமன் உறவு முறையுடைய (22-வயது) இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.

சிறுமி, சட்ட மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமியை சுமார் 6 மாதங்களாக சந்தேக நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். சிறுமி கர்ப்பவதி என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கை கிடைத்ததும் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்‘ – என்று கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.