April 23, 2024

பொலிஸ் காட்டுமிராண்டிகளை கண்டித்தார் மணி

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கத் தயராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மாளிகை திடலில் பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக பொலிஸார் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக கடும் குற்றவாளிகளை கூட தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியோ அதிகாரமோ கிடையாது.

அப்படி இருக்கையில் ஊரடங்கு வேளையில் பொலிஸார் வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடாத்தியமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத காட்டு மிராண்டித்தனமான செயல். இந்த செயலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான சட்ட உதவியை வழங்க தயாராக உள்ளேன். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் மீது பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் – என்றார்.