März 29, 2024

சுவிற்சர்லாந்தில் மிகச்சிறப்பாக நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 ஆம் நாள் சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 29 ஆவது பொதுத்தேர்வாக  06.05.2023 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 58 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 4000 வரையிலான மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயபாடத் தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பத்தாம் வகுப்புத்தேர்வில்   346 மாணவர்களும் பதினோராம் வகுப்புத்தேர்வில் 258 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 250 மாணவர்களும்  தோற்றியமை சிறப்பாகும். தம் தாய்மொழியை விருப்புடன் கற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதிய குழந்தைகளை வாழ்த்துவதுடன், அவர்களை ஊக்குவித்து வழிநடத்தும் பெற்றோரையும் போற்றுகிறோம். 

தாய்மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகும். தாய்மொழியைப் பேணாத இனம் வேறுமொழிகளுடன் கலந்து, கரைந்து அழிந்துவிடும். புலம்பெயர் தேசத்திலும் தம் தாய்மொழியை இடைவிடாது கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகள் தாம் தமிழர் எனும் பெருமையுடனும் நிமிர்வுடனும் வாழ்வதுடன் அடுத்துவரும் பரம்பரையினருக்கும் கடத்திச் செல்வார்கள் என அசைக்கமுடியாத நம்பிக்கைகொள்கிறோம்.   

இப்பொதுத்தேர்வானது 2022 ஆம் ஆண்டுமுதல் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பெறும் அனைத்துலகப் பொதுத்தேர்வின் ஒரு பகுதியாக நடாத்தப்பெறுகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இத்தேர்வினைச் சிறப்பாக நடாத்துவதற்காகத் தேர்வுக்குழு உறுப்பினர்கள்,  மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், இளையோர் ஆகியோர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் தமிழ்க்கல்விச்சேவை நன்றி தெரிவிக்கிறது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert