März 28, 2024

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழையுங்கள்: ஜ.நா மனித உரிமை ஆணையாளர் !

இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு ஒரு தேசிய உரையாடலை ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தனது அரசியல் வாழ்வில் முக்கியமான கட்டத்தில் உள்ளதாகவும், அனைத்து சமூகங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் மனித உரிமைகளை கடுமையாகப் பாதித்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருப்பதாகவும் ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது, ஆழமான சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை ஊக்குவித்துள்ளது.
எனவே நாட்டை ஒரு புதிய பாதையில் வழிநடத்த அரசாங்கத்திற்கு புதிய வாய்ப்பை வழங்குகிறது என்று பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நிலையான முன்னேற்றங்கள் காணப்படுவதற்கு கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்கள், பொருளாதார குற்றங்கள் மற்றும் உள்ளூர் ஊழல்கள் உட்பட பொருளாதார நெருக்கடிக்கு பங்களித்த அடிப்படை காரணிகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்வது இன்றியமையாதது.
தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும், கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் அடிப்படை மாற்றங்கள் தேவைப்படும் என்றும் மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் அறிக்கை கூறுகிறது.
கொடூரமான பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் அமைதியான போராட்டத்தின் மீதான ஒடுக்குமுறைகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
இராணுவமயமாக்கல் நோக்கிய நகர்வை மாற்றியமைக்கவும், பாதுகாப்புத் துறை சீர்திருத்தம் என்பவற்றையும் மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை அரசாங்கத்தை கேட்டுள்ளார்.
வெகுஜன எதிர்ப்புக்களுக்குப் பதிலளிப்பதில் பாதுகாப்புப் படைகள் சமீபத்தில் கணிசமான நிதானத்தைக் காட்டினாலும், அரசாங்கம் கடுமையான அணுகுமுறையை எடுத்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சில மாணவர் தலைவர்களைக் கைது செய்தது மற்றும் அமைதியான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் அதிக அளவில் இராணுவமயமாக்கப்பட்ட சூழல் மற்றும் கண்காணிப்பு கலாசாரம் தொடர்கிறது.
இந்தநிலையில் நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவுதல் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட நிலுவையில் உள்ள கடப்பாடுகளைச் செயல்படுத்த காலக்கெடுத் திட்டத்துடன் நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட மூலோபாயத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஆணையாளர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள் பற்றிய உண்மையை கண்டறிவதில் முன்னேற்றம் இல்லாதது குறித்து கவலையை வெளிப்படுத்தும் ஆணையாளரின் அறிக்கை, சர்வதேச உதவி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழுப் பங்கேற்புடன், தொடர்ந்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் அடுத்தடுத்த அரசாங்கங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கும், உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளுக்கான பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் பயனுள்ள நிலைமாறுகால நீதிச் செயன்முறையைத் தொடரத் தவறிவிட்டன என்று அறிக்கை கூறுகிறது.
மாறாக அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் போர்க்குற்றங்களில் நம்பத்தகுந்த வகையில் சம்பந்தப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு தீவிரமாக ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இல்லாத நிலையில், இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கும், விசாரணை செய்வதற்கும், உலகளாவிய ரீதியில் உள்ள வழிகளைப் பயன்படுத்தி, பொறுப்புக்கூறல் முயற்சிகளில் ஒத்துழைக்குமாறு ஏனைய நாடுகளிடம் ஆணையாளர் கோரியுள்ளார்
அத்துடன், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் மொத்த மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் என்று நம்பத் தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் மேலும் நடவடிக்கைகளை ஆராயுமாறு  ஆணையாளரின் அறிக்கை ஏனைய நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert