April 23, 2024

பேரூந்துகள் இல்லை:முடங்கியது வடக்கு!

 ஏட்டிக்குப்போட்டியாக அரச மற்றும் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் குதித்தத்தால் வடமாகாணம் முடங்கி போனது.

நீண்ட இடைவெளியின் பின்னராக பாடசாலைகள் மீள ஆரம்பமாகிய நிலையில் மாணவர்கள் வீதிகளில் போக்குவரத்தின்மையால் திண்டாடினர்.

இதனிடையே எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்றைய தினம் (25) சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் தனியார் பேருந்து சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடிய போதும் எரிபொருளை பெறுவதற்கான முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடையும். தூர பேருந்து சேவையும் இடம்பெறாது. பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமென யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார்

அதேபோல இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள் இன்றைய தினமும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவரென தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து நடத்துனர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் நேற்று  பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்ட நிலையில் இதுவரை தாக்குதலை நடாத்தியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு உள்ளே வெளி இடங்களிலிருக்குது வருகின்ற பேருந்துகள் உள்நுழையாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ். சாலையின் செயற்பாடுகள் முடங்கி காணப்படுவதால் வெளியூரில் இருந்து வரும் பேரூந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றும் செயற்பாடுகள் முடங்கி காணப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert