April 19, 2024

தந்தை செல்வநாயகம் அவர்களின் 125வது பிறந்த நாள்.

நடுங்கிய குரல்..நடுங்கிய தோற்றம்..ஆனாலும்நடுங்காத கொள்கை!அவர்தமிழீழத்தின்மண்டியிடா

மூத்த தலைவர்—‚தந்தை செல்வா’“மார்ச் 31, 2021- – இன்று தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் 123வது பிறந்த நாள்.இலங்கை தீவில் தமிழர்கள் இனியும் சிறிலங்கா அரசோடு இணக்க அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்து அறவழியில் போராடிய நிலையில் தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத வெறியை சிறிலங்கா அரசு தமிழர்கள் மேல் கக்குவதை கண்டு வருந்தி தமிழ் மக்களை காக்க இதற்கு மேல் என்ன வழி என உணராதவாக „தமிழரை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!“ என்ற வேதனையை தனது சிந்தனை விதைப்பாக விதைத்து சென்றவர் தந்தை செல்வா.அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக 2 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக இருந்தவர்.1898 மார்ச் 31 இல் மலேசியாவின் ஈப்போ நகரில் ஜேம்சு விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகனாக செல்வநாயகம் பிறந்தார்.யாழ்ப்பாணம் தொல்புரம் என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியரான செல்வநாயகத்தின் தந்தை மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து வர்த்தகரான பின்னர் இவரது குடும்பம் தைப்பிங் நகருக்கு இடம்பெயர்ந்தது.செல்வநாயகத்தின் சகோதரர்கள் ஏர்னெஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பி. 1901), எட்வர்ட் ராஜசுந்தரம் (பி. 1902). தங்கை அற்புதம் இசபெல் இளம் வயதிலேயே இறந்து விட்டார். செல்வநாயகம் 4 வயதாக இருக்கும் போது, தாய், சகோதரர்களுடன் இலங்கை திரும்பினார்.செல்வநாயகம் குடும்பத்துடன் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் வாழ்ந்து வந்தார். செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார்.இவருடன் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பின்னாளைய பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கா ஆவார்.செல்வநாயகம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் படித்து தனது 19வது அகவையில் அறிவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார்.பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார்.யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டபோது அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகி பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியில் ஆசிரியரானார்.ஆசிரியப் பணியில் இருந்த போதே இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார்.1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர்.உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர்.செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்ற இவர் காங்கேசன்துறை நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார்.தமிழ் மக்களின் தொடர் இன்னல்கள் கண்டு மனம் மிகவும் வருந்தியவர் அதற்காக குரல் கொடுத்தும் வந்தார்.நோயுற்று முதுமையுற்று தனது இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்த தந்தை செல்வா இனி யார் வருவாரோ தமிழ் மக்களை காக்க என்று வலி சுமந்த ஏக்கத்தோடேயே ஏப்ரல் 26, 1977 அன்று மண்ணை விட்டு மறைந்தார்.அவரின் ஏக்கத்தை போக்கும் வகையில் அகிம்சை வழியில் போராடிய ஈழத்து தமிழ் சமூகம் ஆயுத போராட்டத்தை கையில் எடுத்து அடிக்க வந்த எதிரியை திருப்பி அடித்து எம் மண்ணை விட்டு ஓட விட்ட வரலாறு பின்னாளில் உருவானதும் அதையும் சர்வதேசத்தின் துணையோடும் நசுக்கி ஒடுக்கியது பேரினவாத அரசு என்பதும் அதையும் மீறி மக்கள் போராட்டம் இன்று நீதி வேண்டி நிலத்திலும் புலத்திலும் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் தொடர்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.“வரலாற்றில் வழி காட்டும் தலைவர்கள் மண்ணை விட்டு செல்வதில்லை. மண்ணில் உள்ளவர்களுக்கு வழி காட்டிகளாக வரலாற்றில் நிலைக்கின்றார்கள்!” என்பதற்கு தந்தை செல்வா ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert