März 28, 2024

சிறிலங்காவின் நல்லிணக்கம் இதுதானா? கனடாவில் இருந்து வந்த எதிர்ப்பலை

10380127 - building silhouettes of a city and flag

சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் அதன் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தம்மால் இழைக்கப்பட்ட இனப்படுகொலையை மறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்தாலும், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை சர்வதேச சமூகம் மறக்காது என கனடாவின் ப்ரம்ப்ரன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவித்துள்ளார்.

மாவீரர் தினமான கடந்த சனிக்கிழமை நினைவேந்தலைச் செய்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் உள்ளிட்ட சுமார் 60 பேர் ஊர்காவற்றுறை மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்வதற்கு முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கிகளைத் தரித்திருந்த படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதனையடுத்து அவ்விடத்திலேயே அமர்ந்த அவர்கள், பின்னர் படையினரின் தடைகளை உடைத்துக்கொண்டு துயிலுமில்லத்திற்குச் சென்று ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

சுகாஸ் உள்ளிட்ட தரப்பினர் தரையில் அமர்ந்திருக்க படையினர் துப்பாக்கிகளை ஏந்திய வண்ணம் அவர்களைச் சூழ்ந்து நின்றுகொண்டிருக்கின்றவாறான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

இந்த நிலையில் குறித்த புகைப்படத்தை மேற்கோள்காட்டி அதற்குக் கண்டனம் வெளியிடும் வகையில் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்திருக்கின்ற பதிவிலேயே ப்ரம்ப்ரன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய முகப்புத்த மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தள பக்கங்களில் குறித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கம் இதுதானா?‘ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கனேசன் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு தம்முடைய விமர்சனத்தையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது