April 18, 2024

முல்லைத்தீவில் மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது!

மதம் மாறாவிட்டால் ஆண்டவரின் சாபம் கிடைக்கும்! மிரட்டி மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள   கிழவன்குளம் கிராமத்தில்  மதம் மாற்றச் சென்ற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர் தன்னை பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில்  செய்த முறைப்பாட்டையடுத்து மாங்குளம் பொலிசாரால் வாகனத்துடன் மூவர் நேற்று  (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள   கிழவன்குளம்  பகுதியில் வசிக்கும்  நபர் ஒருவரின் வீட்டுக்கு சென்று மதம் மாறாவிட்டால் ஆண்டவரின் சாபம் கிடைக்கும் என மிரட்டி மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேர் மாங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கிழவன்குளம் பகுதிக்கு ஹயஸ் ரக வான் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் 27.11.2021 அன்று சென்ற ஒரு குழுவினர் அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று அவ் வீட்டு குடும்பஸ்தரை அழைத்து தமது மதத்திற்கு மாறுமாறு கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில்  குறித்த குடும்பஸ்தரை அங்கு சென்ற சபையைச் சேர்ந்தவர்கள் தரக்குறைவாக பேசியதுடன், கடவுளின் பெயரால் சாபமிட்டு அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர்

இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் கிராம அலுவலருக்கு தகவல் வழங்கி மாங்குளம் பொலிசார் மற்றும் 119 பொலிசார் ஆகியோருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் நேற்று (28) அங்கு வருகை தந்த ஹயஸ் ரக வாகனத்தையும், அதனுள் வந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மாங்குளம் பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை கிழவன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக ஒரு சபைக்கூடம்  அமைக்கப்பட்டு மதமாற்ற செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது