April 22, 2024

ஒமிக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை கட்டாயம் 

email sharing button
sharethis sharing button

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் கவலை தரக்கூடியது என்று அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஆங்காங், பெல்ஜியம் போன்ற நாடுகளில் இந்த புதிய வைரஸ் பாதிப்பு உள்ளது. இதன் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளுடன் விமான போக்குவரத்துக்கு பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்தியாவில் இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச விமான போக்குவரத்து தடையை நீட்டிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், வெளியாட்டு பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ள நாடுகள் மற்றும் அந்த வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள நாடுகளில் இருந்து வருவோர், விமான நிலையத்தில் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும், அதன் முடிவு வந்தபிறகே விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டும், அல்லது இணைப்பு விமானத்தில் பயணிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள், ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படும் நாடுகளாக இந்தியா பட்டியலிட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகை தரும் பயணிகள் புதிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இந்த பட்டியலில் உள்ள நாடுகளைத் தவிர மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் வந்த பிறகு 14 நாட்களுக்கு அவர்களின் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும். அவர்களில் சுமார் ஐந்து சதவீதம் பேர் விமான நிலையத்தில் சோதனை செய்யப்படுவார்கள்.

இந்த நிலையான வழிகாட்டு நடைமுறை டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.