März 28, 2024

பிரான்சில் நடைபெற்ற மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு

தமிழீழ தேச விடுதலைப்போராட்த்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு

பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேச்த்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையினால் நடாத்தப்பட்டது.காலை 10.30 மணிக்கு பொதுச்சுடரினை நந்தியார் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. சாந்திக்குமார் ஏற்றி வைக்க  தமிழீழத் தேசிக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனை துணைப் பொறுப்பாளர் திரு. வல்லிபுரம் பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரினை .19.01.1997 அன்று வீரச்சாவடைந்த கடற்புலி வெப்.ராஜ்மோகன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க மலர் வணக்கத்தை 1998 இல் கிளிநொச்சியில் வீரச்சாவடைந்த மாவீரர் லெப். கேணல் கலைஒளி அவர்களின் சகோதரர் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து வந்திருந்த மாவீரர்களின் பெற்றோர் சகோதர உறவுகள் பொதுமக்கள் சுடர் ஏற்றி , மலர் வணக்கம் செலுத்தினர்..

மாவீரர் நினைவுசுமந்து தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவச் செவ்வங்களின் பேச்சு, பாட்டு, தனிநடிப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு குழந்தைகளும் தமது அற்புதமான கலைத்திறன்களை வெளிக்காட்டி வந்திருந்த மக்கள் மத்தியில் கண்ணீரை வரவைத்திருந்தனர்.

தொடர்ந்து மாவீரர் சிறப்புரை இடம்பெற்றது. சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில்

அன்பான பெற்றோர்களே! சகோதரர்களே எம் குழந்தைகளின் உன்னத தியாகம் அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில் எம்மோடு நீங்கள் தொடர்ந்து எமக்கு பேருதவியாக பலமாக, தடம்பிறளாது நேர்த்தியாக பயணிக்க நீங்கள் எந்தக் குழப்பத்துக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் இதையே எங்கள் மாவீரர்களின் திருவுருப்படத்தில் முன் உரிமையோடு கேட்டுக்கொள்வதுடன்,

மாவீரர்நாளுக்கு வரும்போது 12.00 மணிக்குத தேசியக்கொடியேறும் போது வரும்படியும், தடுப்பூசி ஏற்றிய உங்கள் , பரிசோதனைத் துண்டு மற்றும் மாவீரர் குடும்ப அடையாளப் படுத்தலுடன் வருகை தரும் படியும் கேட்டுக்கொள்கின்றோம் என்பதாக அவருடைய உரை நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் மதியபோசனம் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து வந்திருந்த அனைத்து மாவீரர் பெற்றோர், சகோதரர்கள் மாவீரர் நினைவு சுமந்த தேசியத் தலைவர் சிந்தனையும், தனது மக்களை அவர் எவ்வாறு தாங்கிவைத்துள்ளார் என்பதை உணர்த்தும் நிழற்படத்தை நினைவுப் பொருளாக வழங்கிவைத்து மதிப்பளிப்புச் செய்துவைக்கப்பட்டனர்.

தமிழீழ தேசியக் கொடி இறக்கி வைக்கப்பட்டு மாலை 16.00 மணிக்கு தாரகமந்திரமான தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் உச்சரித்து நிகழ்வு நிறைவுபெற்றது.