März 28, 2024

ஞானசாரரையே வெட்கப்பட வைத்த முல்லைவீரர்கள்!

ஆளுக்கொரு அமைப்புக்களை உருவாக்கி சிங்கள தேசத்தை குளிர்விப்பது தற்போது தமிழ் தரப்புக்களிடையே தற்போது பிரபலமாகிவருகின்றது.

ருத்ரசேனை எனும் அமைப்பில் ஞானசாரரை குளிர்விக்க ஒரு தரப்பு செயற்பட அதில் ஒரு தரப்பு தனித்து இன்றைய தினம் முல்லை வந்த ஞானசாரரது ஜனாதிபதி செயலணியினர் முன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் பதிவுசெய்த விடையங்கள்  என பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது.

1.அரச நிறுவன தலைவர்களின் நியமனங்களில் மதரீதியான பாகுபாடு பார்க்கக்கூடாது.

2. பாடசாலை அதிபர் நியமனங்கள் தகுதிகளைக்கடந்து மதத்தை முன்னிலைப்படுத்தி வழங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.

3. அனைத்து பாடசாலைகளிலும் அனைத்து மதத்தவர்களினதும் அடையாளங்கள் வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

4. முன்பள்ளிகள் மதமாற்ற முன்னாயத்த நிலையங்களாக செயற்படுகின்றது. அது நிறுத்தப்படல் வேண்டும். ஓர் வரைமுறைக்குள் முன்பள்ளிகள் அனைத்தும் கொண்டுவரப்பட வேண்டும்.

5. மதமாற்றும் நோக்கில் ஏனைய மத தெய்வங்கள் சாத்தான்கள் என்றும் ஏனைய மதத்தவர்கள் காஃபிர்கள் என்றும் இழிவுபடுத்தப்படும் நிலை உள்ளது. இது மத இன நல்லிணக்கத்திற்கு எதிரானது. எனவே சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

6. ஏனைய மத இன இருப்பை ஏற்காத மதங்கள் தடைசெய்யப்பட வேண்டும். அவ்வாறான மதநூல்கள் தடைசெய்யப்பட வேண்டும்.

7. திருமணம் போன்ற குடியியல் சட்டங்களில் ஒரு இனத்தவர் நான்கு திருமணம் முடிக்கலாம். ஏனைய இனத்தவர்கள் முடித்தால் தப்பு எனும் நிலை மாற்றப்பட வேண்டும். இவ்வாறான நிலை மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது.

8. இந்த நாட்டிற்கு சம்பந்தம் இல்லாத மதத்தலங்கள் ஊருக்கு நான்கு எட்டு என அமைக்கையில் எதிர்க்காதவர்கள் பௌத்த விகாரை அமைப்பது என்றால் எதிர்ப்பது ஏன்?

ஏனெனில் அவ்வாறு எதிர்ப்பவர்கள் யாரும் தமிழர் இல்லை.

9. குருந்தூர் மலைக்கும் நீராவியடி பிள்ளையாரிற்கும் போராட்டம் நடாத்தியவர்கள் யாரும் திருக்கேதீச்சரம் உடைக்கப்படுகையில் மீசாலையில் சங்குப்பிட்டியில் பிள்ளையார் கோயில் உடைக்கப்படுகையில் போராட்டம் நடாத்தவில்லை.

நீராவியடியில் குருந்தூர் மலையில் போராட்டம் நடாத்தியவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை. போர்த்துக்கேய வம்சத்தில் வந்தவர்களே இந்து பௌத்த மோதலை உண்டாக்குவதற்காக போராட்டங்களை நடாத்துகின்றார்கள்.

10. தமிழர் மரபுரிமை பேரவை என்று ஒரு அமைப்பு உள்ளது. மரபு என்றால் எம் முன்னோர்களின் வழிவழியாக வந்த இயல்பு ஆகும். ஆனால் எம் மரபை அழித்து மதம்மாறியவர்களே தமிழர் மரபுரிமை பேரவை என்ற அமைப்பை நடாத்துகின்றனர். அதில் ஒருவர்கூட தமிழரில்லை.

11. வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள். அதில் ஒருவர்கூட தமிழரில்லையென கிராமசேவையாளர் ஒருவரை தலைமையாக கொண்ட தன்னார்வ தரப்பென ஒரு தரப்பு இன்று ஞானசாரரை குளிர்வித்தது.

எனினும் தமது அமைப்பிற்கும் கடந்த 5ஆம் மாதத்தில் இருந்து கருத்து முரண்பாடுகள் காரணமாக குறித்த கிராமசேவையாளருக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.;. நாம் ஞான சார தேரரை வரவேற்கும் எண்ணம் இருந்திருந்தால் அதை எம் அமைப்பின் இயங்கு தளமான யாழ்ப்பாணத்திலே செய்து இருப்போம்.  அத்தோடு இன்று நடைபெற்ற கூட்டத்தில் எமது அமைப்பை சார்ந்த எவரும் பங்குபெறவும் இல்லை எனவும் ருத்ரசேனை தனது முகநூலில் விளக்கமளித்துள்ளது.