April 20, 2024

சைவத்திற்கே முன்னுரிமை:ஞானசாரரிடம் சச்சி!

சாவகச்சேரி நீதிமன்ற அழைப்பிற்கு கொரோனா தொற்றை சொல்லி குரல் எழுப்பிய ஈழம் சிவசேனை மறவன்புலோ சச்சிதானந்தன் கோத்தபாயவின் ஜனாதிபதி செயலணியுடன் சைவர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இலங்கை குடியரசுத் தலைவரின் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தலைவர் ஞானசார தேரர்,தமிழ் உறுப்பினர்கள் திருமதி பற்குணராசா ,தயானந்தராசா உள்ளிட்டவர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜந்தரை மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார் மறவன்புலேர் சச்சிதானந்தன்.

சந்திப்பில் அம்பாறை மட்டக்களப்பு வவுனியா மன்னார் யாழ்ப்பாண மாவட்டங்கள் சார்ந்த சைவ சமய அமைப்புகளின் தலைவர்கள் தோராயமாக 25 பேர் ; ஒரே நாடு  ஒரே சட்டம் செயலணியைச் சந்தித்துள்ளனர்.

சைவ சமய அமைப்பின் தலைவர்கள் பின்வரும் நான்கு சட்டங்களை உடன் நிறைவேற்றக் கோரினர். அச் சட்டங்களின் தேவை தொடர்பாக வட மாகாணத்தின் கிழக்கு மாகாணத்தின் கள நிலைகளை எடுத்துக் கூறினர்.

அரசியலமைப்பில் புத்த சமயத்திற்கு முன்பே இலங்கையில் இருந்து வந்த சைவ சமயத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்,மதமாற்றத் தடைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்,மாடுகள் கொலைத் தடைச் சட்டத்தை உடன் நிறைவேற்ற வேண்டும் மற்றும் திருக்கோயில்களில் உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.

சைவர்களைச் சந்திப்பதற்காக அடுத்த மாத நடுப்பகுதியில் குடியரசுத் தலைவரின் செயலணி வடக்கே மீண்டும் வரும் எனத் தலைவர் கூறியதாக மறவன்புலோ சச்சிதானந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.