April 24, 2024

13 தான் வேண்டும்:டெலோ!

இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டத்தில் தீர்வை காண்பதென்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் விடாப்பிடியாக உள்ளது.

13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பிரித்தானிய உயர் ஸ்தானிகருடனும் தமிழீழ விடுதலை இயக்கம் சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஸாரா ஹல்டன் அம்மையார் உடனான சந்திப்பு இன்று வியாழக்கிழமை காலை கொழும்பில் அமைந்த உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்  நடைபெற்றுள்ளது.

சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதாக தமிழீழ விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் தலைமையிலே ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட  46-1 பிரேரணை பற்றி ஆராயப்பட்டது.

தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்க முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு இன குடிப்பரம்பல் சிதைப்பு  என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும்  முயற்சியாக ஐநா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்றுவது, மாகாணசபை தேர்தல்கள்  சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் மறுபுறம் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் பிரித்தானியாவை நாடியுள்ளது.