April 25, 2024

வவுனியாவில் வீடு வீடாகச் செல்லும் பொலிஸார்!

வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையை உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிஸார் வீடு வீடாக சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குள் மாவீரர் வாரத்தினை (20 – 29)  நினைவு கூருவதற்கு வவுனியா தலைமையகப் பொலிஸாரினால் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவு கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட்து.

குறித்த மனுவை ஆராய்ந்த நீதிமன்று அந்த நிகழ்விற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பொலிஸாரினால் பெயர் குறிப்பிட்டப்பட்ட 8 பேருக்கும் தடை உத்தரவு கட்டளையை வழங்கியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தன், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி கா.ஜெயவனிதா, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், (Sivasakthy Ananthan) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், (P. Sathiyalingam) தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உப தலைவர் சி.கஜேந்திரகுமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முக்கிய செயற்பாட்டாளர் சு.தவபாலன் ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதில் பெயர் குறிப்பிட்ட சிலரது முகவரிகள் தவறாக பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளமையால் குறித்த நபர்களை தேடி வவுனியா பொலிஸார் வீடு வீடாக சுற்றி வருகின்றனர். பின்னர் தொலைபேசி அழைப்பெடுத்து அவர்கள் நிற்கும் இடங்களுக்கு சென்று குறித்த தடை உத்தரவுகள வழங்கப்பட்டடு வருகின்றது.

இதேவேளை, குறித்த தடை உத்தரவில் தமது பெயர்கள் இருக்கின்ற போதும் முகவரிகள் பிழையாக உள்ளதாகவும், பொலிஸரால் வழங்கப்பட்ட கட்டளையில் தமிழ் எழுத்து பிழைகள் அதிகமாக உள்ளதாகவும் தடை உத்தரவைப் பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.