April 19, 2024

மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள 03 பேருக்கு தடை

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல்  தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய வருடந்தோறும் கார்த்திகை 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் மூன்று பேருக்கு கார்த்திகை 20 ஆம் திகதி முதல் 30 ம் திகதி வரை தமது காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான  தடையுத்தரவை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில்  சிங்கள காவல்துறையினரினால் இன்று மாங்குளம் நீதிமன்றில் ஏஆர்/874/21 வழக்கினூடாக ஒட்டுசுட்டான் காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் மூன்று பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூக செயற்பாட்டாளர்களான தர்மலிங்கம் ஜீவரத்தினம் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன்)உள்ளிட்ட மூன்று பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.