April 19, 2024

கதிர்காம கந்தனிடமும் களவு!

கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 மில்லியன் பெறுமதியான இரத்தினக் கற்கள் காணவில்லை என  முறையிடப்பட்டுள்ளது.

இந்த இரத்தினக்கற்கள் இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவரினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இது 50 மில்லியன் ரூபா பெறுமதியான என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் கதிர்காமம் ஆலயத்தில் 38 பவுன் தங்கத் தட்டு ஒன்று காணாமல் போயிருந்த நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன். கதிர்காமம் ஆலயத்தில் பணி புரியும் நான்கு பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் திகதி என். எம். அஜித் புஸ்பகுமார என்ற நபர் காணாமல் போன தங்க தகடு போன்ற தங்க தட்டு ஒன்றை கொண்டு வந்து கதிர்காமம் தேவாலய நிர்வாக செயலாளரிடம் கையளித்துள்ளார்.

இந்த தங்க தட்டு அந்த ஆலயத்தின் பிரதான பூசகராகச் செயற்படும் சோமபால ரி ரத்நாயக்கவின் இல்லத்தில் இருந்ததாகத் தெரிவித்து, குறித்த நபரினால் கையளிக்கப்பட்டுள்ளது.

இது காணாமல் போன தங்கத்தட்டா என்பது குறித்த விசாரணைகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரப்படும் நிலையில் , தற்போது 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் காணாமல் போயுள்ளது.