April 20, 2024

கனடா செல்ல முயன்றவருக்கு ஏற்ப்பட்ட கதி!

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்ணுக்கு ஜாமின் வழங்கப்பட்ட போதிலும், அவரின் கணவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 23 பேர் கனடா செல்லும் நோககில் படகில் துாத்துக்குடி வந்த நிலையில், மதுரை கப்பலுாரில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

கடவுச்சீட்டு, விசா இன்றி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து கனடா செல்ல முயன்றதாக கியூ பிரிவு பொலிஸார் இவர்களுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஸ்டார்வின் அவரது மனைவி சுதா ஆகியோர் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

“ஸ்டார்வின் இந்திய குடிமகன். சுதா இலங்கையைச் சேர்ந்தவர். இவர்கள் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது என மனு தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், ஸ்டார்வினுக்கு எதிராக பெங்களூரில் என்.ஐ.ஏ.வழக்குப் பதிந்துள்ளது.

அவருக்கு ஜாமின் அனுமதிக்கக்கூடாது. சுதாவிடம் கடவுச்சீட்டு இல்லை. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனில் சட்டப்படி முகாமில் வைக்க உத்தரவிட வேண்டும் என அரச தரப்பு கோரியது.

இரு தரப்பினரின் வாதத்தை கேட்ட நீதிபதி, என்.ஐ.ஏ., விசாரிப்பதால் ஸ்டார்வின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சுதாவிற்கு 2 வயது குழந்தை உள்ளதால் அவருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. அவர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வேண்டும் என உத்தரவிட்டார்.