April 19, 2024

இந்தியா- சீனாவுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம்!

இந்தியா- சீனாவுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம்!

இந்திய எல்லையையொட்டி சீன இராணுவத்தின் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திடம் பென்டகன் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே தாங்கள் உரிமை கொண்டாடும் பகுதிகள் தங்களுக்குதான் சொந்தம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக சீன ராணுவம் அந்தப் பகுதியில் தனது நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீனா, அணு ஆயுதங்களை எதிர்பார்த்ததைவிட, அதி விரைவாக பெருக்கிவருகிறது என அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு இணையாக சீனா அணு ஆயுதங்களை குவித்து வருகிறது. இதுகுறித்து பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், “2027ஆம் ஆண்டுக்குள், 700 அணு ஆயுதங்களை சீனா தயாராக வைத்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும். ஓராண்டுக்கு முன்பு கணித்ததைவிட 2.5 மடங்கு அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை கொண்டிருக்கும். நிலம், கடல், காற்று ஆகியவைற்றை சார்ந்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதிலும் அணு ஆயுத படைகளின் விரிவாக்கத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் சீனா முதலீடு செய்து வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா ஆகிய முன்னணி அணு ஆயுத நாடுகளை போன்று அணு ஆயுத முப்படைகளை சீனா கட்டமைத்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நிலத்திலிருந்து அதிக தொலைவிற்குப் பாயும் ஏவுகணைகள், வானிலிருந்து பாயும் ஏவுகணைகள், ஆழ்கடலில் இருந்து பாயும் ஏவுகணைகள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.

சீனாவின் அணு ஆயுத எதிரி நாடுகளில் முதன்மை நாடான அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளும் திறனை வளர்த்து கொள்ள அந்நாடு முயலவில்லை. ஆனால், மற்ற நாடுகள் தாக்குதல் நடத்தாதவாறும் அப்படி நடத்தப்பட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்துதல் விடுப்பதற்காகவும் சீனா இப்படி செய்துவருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் இராணுவ வளர்ச்சி குறித்த அறிக்கையை அமெரிக்க பாதுகாப்புத்துறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், சீனாவின் இராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவிடம் 200 அணு ஆயுதங்கள் தயாராக இருக்கிறது என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் பென்டகன் ஓராண்டுக்கு முன்பு தெரிவித்திருந்தது.

மேற்கு சீனாவில் புதிய அணு ஏவுகணைக் குழிகள் பற்றிய செயற்கைக்கோள் புகைப்படங்களை சுதந்திர ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். சீனாவின் அணு ஆயுத விரிவாக்கம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க உயர்மட்ட அலுவலர் ஒருவர், இது எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அவர்களின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.