April 24, 2024

எமது விடுதலைக்கு குரல்கொடுங்கள்; திருச்சியிலுள்ள ஈழத்தமிழ் கைதிகள்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்றுள்ள 9 பேர் கடவுச்சீட்டு காலாவதியாகிய நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இன்றைய தினம் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

அதில் தடுப்புக் காவலில் இருந்து விடுதலை பெற்றுத்தரக் கோரிக்கை என தலைப்பிட்டு கடிதம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர்கள்வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு என்று முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

திருச்சி சிறப்பு முகாமில் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நாங்கள் ஒன்பது பேரும்,இலங்கையில் இருந்து கடவுச்சீட்டு மூலம் சுற்றுலா நுழைவுச்சீட்டு பெற்று சட்டரீதியாக இந்தியாவிற்கு வந்தவர்கள்.

நாங்கள் நுழைவுச்சீட்டு கால எல்லை முடிந்த மற்றும் வாழ்வாதாரம் காரணமாக இந்தியக்கடவுச்சீட்டுப் பெற முயற்சி செய்த குற்றத்திற்காக , கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகத் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளோம்.

இங்கு எங்களது குற்றங்களுக்குரிய தண்டனைக்காலம் ஆறு மாதங்கள் தொடக்கம் ஒரு வருடம் மட்டுமே. ஆனால் நாங்கள் எந்தவித நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் கொண்டுசெல்லப்படாது கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறோம்.

விடுதலை கிடைக்குமா இல்லையா என்ற கேள்வியோடு இங்கு ஒவ்வொரு நாளையும் மிகவும்சிரமத்தின் மத்தியில் கழித்துவருகிறோம்.

எமது விடுதலையை வலியுறுத்தி 50 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.இப்போராட்டத்தின் போது எம்மில் சிலர் விரக்தியின் உச்சத்தில் தமது உயிரையும் மாய்பதற்கு முயற்சித்த பரிதாப சம்பவங்களும் இடம்பெற்றன.

நாங்கள் இந்தியாவில் இருந்த காலத்திலோ அல்லது இலங்கையில் இருந்த காலத்திலோ எந்தவித குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்கள்.எங்கள் குடும்பங்கள் மிகவும் வறுமையினால் எந்தவித உதவியும் இன்றி வாழ்கின்றனர். சிலரது குடும்பங்கள் சீர்குலைந்து போகும் மிக வேதனையான சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் பெரும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளோம்.கடந்த 27 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் ஊடாக அறிந்தோம் அதில்,குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளவர்களை தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகு,உடனடியாக அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து,எம்மை எமது நாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆவனசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அல்லது பொதுமன்னிப்பு அடிப்படையில் எங்களை விடுதலை செய்து எமது நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யுங்கள் என தாழ்மையுடன் உங்களை வேண்டி நிற்கின்றோம்.என அதில் தெரிவித்துள்ளனர்.