April 20, 2024

ஆளுநர் பதவி ராஜினாமா? வதந்தியாளர்களிடம் கேட்கவும்!

இலங்கையின் கல்வி மட்டத்தில் வடமாகாணம் 9வது அதாவது கடைசி நிலையிலிருந்து தற்போது முன்னேறிக்கொண்டிருப்பது அண்மை பரீட்சை முடிவுகளால் உறுதியாகியிருப்பதாக வடமாகாண ஆளுநர் எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியான சாதாரண தரப்பரீ;ட்சையின் முடிவுகள் வடமாகாண கல்வியின் முன்னேற்றம் தொடர்ப்பில் உற்சாகத்தை தந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடமாகாணத்தின் பல கிராம மட்ட பாடசாலைகளது பரீட்சை முடிவுகள் மிக்பெரிய நம்பிக்கையினை தந்திருப்பதாக தெரிவித்த வடக்கு ஆளுநர் ஏற்கனவே முன்னதாக வெளியாகியிருந்த கல்வி உயர்தரப்பரீட்சை முடிவுகளின் பிரகாரம் ஒன்பதாவது இடத்திலிருந்து வடமாகாணம் ஆறாவது இடத்தினை எட்டியமைக்கு காரணமான கல்வி அமைச்சின் செயலாளர்,மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரிற்கும் தனது பாராட்டையும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

அதிலும் குறிப்பாக சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் பிரகாரம் கணிதம்,விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் 72விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மாணவர்கள் சித்தி பெற்றிருப்பது நம்பிக்கையினை தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே வடமாகாண ஆளுநராக புதியவர் நியமிக்கடவுள்ளதாகவும் தாங்கள் பதவி விலகவுள்ளதாகவும் அடிக்கடி செய்திகள் வெளிவருகின்றனவேயென ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவ்வாறான வதந்திகளை பரப்புவர்களிடமேயே அதற்கான பதிலை கேட்டுப்பெறவேண்டுமெனவும் ஆளுநர் சாள்ஸ் சிரித்தவாறே பதிலளித்தார்.