März 29, 2024

சர்வதேசத்தின் தலையீட்டுடன் தான் எமக்கான தீர்வு – சிவாஜி

இலங்கை அரசாங்கம் இன்று நேற்று அல்ல சுதந்திரம் பெற்ற காலம் முதலே சர்வதேசத்திற்கும் இலங்கை மக்களுக்கும் மாறுபட்ட கருத்துக்களைத்தான் கூறிவருகின்றது.இவர்களை நாங்கள் நம்பத் தயாரில்லை. எங்களுடைய தலை விதியைதீர்மானிக்கக்கூடிய விதத்தில் சர்வதேசத்தின் தலையீடைக்கூறி ஒரு பொதுசன வாக்கொடுப்பின் மூலம் தான் பிரச்சினைக்குத் தீர்வு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் பேராரியர் ஜீஎல் பீரிஸ் சர்வதேசத்தின் வகிபாகம் அவசியம் இல்லை அது அரசியல் அமைப்புக்கு முரணானது என கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்குள்ளே ஒருபோதும் வராதது வரும் என்று நம்பினால் எங்களைப்போன்று முட்டாள்கள் வேறு யாரும் இல்லை சர்வதேசத்தின் தலையீட்டுடன் தான் எமக்கான இனப்பிரச்சினக்குத் தீர்வு கிடைக்கும்.

இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்றதில் இருந்து சிங்களப் பெளத்த தலைமைகள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றார்கள் அது மாத்திரமல்ல வெளிநாடுகளையும் அந்த ஏமாற்றத்துக்குள் நம்ப வைத்து அவர்களையும் ஏமாற்றி வருகின்றார்கள்.

இதன் விளைவுதான் இந்திய இலங்கை பிரஜா உரிமைச்சட்டம். இதில் மலையத்தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது அதேபோன்று 1964 மறைந்த இலங்கைப் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியுடனான நாடு கடத்தல் ஒப்பந்தம் இதன் மூலம் 5 லட்சம் மலையகத்தமிழர்கள் இந்தியாவிற்கு கட்டாயமாக நாடு கடத்தப்பட்டார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு விடையத்திலும் நடந்து கொண்ட அரசாங்கங்கள் குறிப்பாக போர் உச்சத்தில் இருந்தபோது சர்வதேசத்திற்கு குறிப்பாக இந்தியாவிற்கு கூறிக்கொண்டது தமிழ் மக்களுடைய பாதிப்புக்கள் பூச்சியம் என்று கூறினார்கள் அதற்கு இந்திய பத்திரிகைகள் துணைபோயிருந்தன இதைவிட 2008 ஆம் ஆண்டு 04 திகதி இடம்பெற்ற காலி முகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின விழாவில் அன்று ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச உரையாற்றியபோது தன்னுடைய அமைச்சரவையில் இருக்கக்கூடிய டக்ளஸ்தேவானந்தா மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் ஆனந்த சங்கரி போன்றவர்களுடைய கொள்கையை விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய விதத்திலாவது இந்தியாவில் இருக்கின்ற மாநில சுயாட்சியை வழங்குவேன்

13++ எனச் சொன்னவர் இன்று 13++ இல்லை 13 இல்லாமல் போகின்ற நிலைதான் காணப்படுகின்றது. ஆகவே சர்வதேசத்திற்கு ஒரு வாக்குறிதியும் இலங்கையில் ஒரு வாக்குறுதியைக்கூறி குத்துக்கரணம் அடிப்பது இன்று நேற்று அல்ல தொடர்ச்சியாக செய்து வருகின்ற பரம்பரரை வழக்கமாக உள்ளது.

போர் முடிந்து ஐ.நாவின் செயலாளர் நாயகம் பாங்கின் மூன் முள்ளிவாய்க்கால் பகுதியை விமானம் மூலம் பார்த்த பின்னர் ஜனாதிபதியுடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

அந்த கூட்டறிக்கையில் தொரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது? இதேபோல் 2015 ஆம் ஆண்டு ஐ.நா.மனித உரிமைப்பேரவையினால் கொண்டுவரப்பட்ட 31/1 தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாக ஒப்புக்கொண்டது அதில் வெளிநாட்டு நீதிபதியை உள்ளடக்கிய உள்நாட்டுப்பொறிமுறை அதைக்கூட செய்யமாட்டோம் என்று அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் திரும்பத் திரும்பக்கூறியுள்ளார்கள். இதனைத்தான் ஐ.நா.வில் ஒரு பேச்சு இலங்கை வந்தவுடன் இன்னொரு பேச்சுமாக உள்ளது.

சர்வதேச பொறிமுறை அல்லாமல் எத்தகைய தீர்வும் வராது பேச்சுவார்த்தைகூட சர்வதேச மத்தியஸ்தத்துடன் செய்யப்படவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை பேராரியர் ஜீ.எல்.பீரிஸ் பற்றிக்கூறுவதாயின் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி சந்திரிகா அமையாருடன் சேர்ந்து ஒரு தீர்வுப்பொதியை வெளியிட்டவர் இன்று அந்தத் தீர்வுப்பொதியைப் பொறுத்தவரையில் காலாண்டு கடந்துள்ளது.

தொடர்ந்தும் அவர் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றார் அவர் இருக்கின்ற இடங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றனவே தவிர குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெரமுன என மாறியிருக்கின்றார்கள் இவரைப்போன்ற ஒரு பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவரே இவ்வாறு செய்கின்றார் என்றால் படித்தவர் படிக்காதவர் பாமரர் என்ற விடயங்கள் இல்லாது சிங்கள பெளத்தம் தன் பேரினவாதத்தை மிக வேகமாக இருக்கின்றபடியால் நாங்கள் எங்களுடைய தலை விதியைதீர்மானிக்கக்கூடிய விதத்தில் சர்வதேசத்தின் தலையீடைக்கூறி ஒரு பொதுசன வாக்கொடுப்பின் மூலம் தான் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் இலங்கைக்குள்ளே ஒருபோதும் வராதது வரும் என்று நம்பினால் எங்களைப்போன்று முட்டாள்கள் வேறு யாரும் இல்லை என்றார்.