März 29, 2024

போதை விளையாட்டு:வெடி வைத்து பிடிக்கப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை மேல் வெடி வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் செபஸ்ரியன் வீதி பகுதியில் , உள்ள வீடொன்றில் மதுபோதையில் இளைஞன், தாய் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்தி, அட்டகாசம் புரிந்துள்ளார்.

அது தொடர்பில் அயலவர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

அதன் போது, குறித்த இளைஞன் வீட்டில் இருந்த வாள் ஒன்றை தூக்கி பொலிஸார் மீது வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

அதனை அடுத்து பொலிஸார் வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து இளைஞனை மடக்கி பிடித்துள்ளனர். அத்துடன் இளைஞனிடம் இருந்து வாளையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணகளை முன்னெடுத்து வருகின்றனர்.