April 20, 2024

ஐந்து வருடங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு தடையுத்தரவு!

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு பொலிஸார், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தவுள்ளனர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் நேற்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் வழக்கு பதிவு பதிவுசெய்திருந்தனர்.

அதனடிப்படையில், பொலிசாரல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நால்வருக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனவே, நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குள் இராசையா பார்த்தீபன் தொடர்பிலான எந்தவொரு நினைவுகூரலையும் மேற்கொள்ளக்கூடாது என்று தடைக்கட்டளையை நீதிமன்றம் விதித்துள்ளது.

இக் கட்டளையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, ஆகியோருக்கே இவ் தடை உத்தரவுகளை பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந் நிலையில், குறித்த தடையுத்தரவை முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட வர்கள் இன்று, ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் அவர்களுடைய இல்லத்துக்கு எடுத்து சென்று அவருடைய மகன் பீற்றர் இளஞ்செழியனிடம் வழங்கியபோது இதில் தன்னுடைய பெயர் இல்லை எனவும் பெயர் குறிப்பிடப்பட்டவருக்கு வழங்குவதாக இருந்தால் முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் கொண்டு சென்று வழங்குமாறும் கூறி பொலிசாரை திரும்பி அனுப்பியுள்ளார்.