März 28, 2024

‚பாதணிகளை நக்கச் சொன்ன அமைச்சரின் நண்பர்கள்‘ சிறைக்குள் நடந்தது என்ன?

அனுராதபுர சிறைச்சாலைக்கு அமைச்சருடன் (சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த) சென்ற அமைச்சரின்  நண்பர்கள், தமது பாதணிகளை நாக்கினால் நக்கிச் சுத்தம் செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்ததாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வழக்கம் போல ஊடக அறிக்கைகளை விடுத்து பின்னர் ஓய்ந்து போவது எமது தலைவர்களது பண்பாடாகும். அவ்வாறில்லாமல் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

கைதிகளது நலன்களை பாதுகாக்கும் ஒரு அமைச்சராக இருந்து கொண்டு எமது பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் மீது தனது நண்பர்களுடன் மதுபோதையில் இரவு நேரத்தில் துப்பாக்கி முனையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் அதிர்ச்சியை தந்துள்ளது.

அக்கும்பல் எமது பிள்ளைகளை தமது பாதணிகளை நாக்கி துப்புரவு செய்ய சொல்லியிருக்கின்றனர். எமது உறவுகளை உயிருடன் பாதுகாக்க முதலில் அவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றவேண்டும். அதற்கு முன்னதாக அவர்கள் தொடர்பிலான வழக்குகள் உள்ள நீதிமன்றங்களில் அவர்களை முன்னிலைப்படுத்தி நடந்தவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

கைதிகள் நீதிமன்ற விசாரணைகளிற்காகவே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் அவர்களை பாதுகாக்க வேண்டியது இலங்கை நீதிமன்றங்களது கடமை.

தமிழ் கட்சிகளது பிரதிநிதிகள் குழுவொன்று உடனடியாக நேரில் அனுராதபுரம் சிறைக்கு பயணம் செய்து தமிழ் அரசியல் கைதிகளது நலன்களை முதலில் கண்காணிக்கவேண்டும்.

16 அரசியல் கைதிகளது விடுதலை பற்றி வெளிவிவகார அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருக்க, சிறையினுள் கைதிகளை அதற்கு பொறுப்பான அமைச்சரே கொல்ல முற்படுகின்ற அவலம் நடந்திருக்கின்றது என தெரிவித்தார்.