März 28, 2024

புலிகளுக்கு எதிரான விசாரணையை நாங்கள் கோரவில்லை – தமிழரசுக் கட்சி!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை, எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை என, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.அதை மட்டும் தன்னால் உறுதியாக கூற முடியுமெனவும் அவ்வாறு எழுதினால் தான் அதனை வெளிப்படுத்துவதாகவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தான் தமிழரசு பாரம்பரியத்தில் வந்தவனெனவும் சேம் சைட் கோலடிக்கும் தேவை தனக்கு கிடையாதெனவும் கூறினார்

எது நியாயமோ, எது சரியோ, அதை யார் செய்தாலும் சரி என்பேன் எனத் தெரிவித்த அவர், அதே பிழை என்றால், பிழை என்று கூறுவதே, தன்னுடைய பொறுப்பெனவும் கூறினார்.

இனி தான் பயப்படமாட்டேன் எனத் தெரிவித்த அவர், இதுவரை தான் அடக்கி வாசித்ததாகவும் இதனால், தன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் எனவும் கூறினார்.

ஒரு சிலரை தாக்குவதாக நினைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியை தாக்குகின்றனர் எனத் தெரிவித்த சிவஞானம், ‚தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது பகல் கனவு. எந்த கொம்பனாலும் அதனை அழிக்க முடியாது. பங்காளி கட்சிகள் போகப் போகிறோம் என முடிவெடுத்தால் அதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால், அவர்கள் அவ்வாறான முடிவொன்றை எடுக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்‘ என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, தமிழரசுக்கட்சி மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக, ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, ‚என்னை பொறுத்தவரையில் ஊடகச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, சில செய்திகளில் உண்மை இல்லை என்றே தெரிகிறது‘ என பதிலளித்தார்.

இந்தக் கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த சிவஞானம் கூறியதாவது,

‚தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை. அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். அவ்வாறு எழுதினால் நான் அதனை வெளிப்படுத்துவேன்.

கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே, அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்பமாட்டேன்‘ என்றார்.