April 19, 2024

101ஆவது அகவையில் 2 ஆம் உலகப் போரில் விமானியாகி சாதனை படைத்த ஒரேயொரு ஈழத்தமிழன் கப்டன் செல்லையா இரத்தின சபாபதி

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பணியாற்றிய வரும் பிரித்தானியா விமானப் படையில் பணியாற்றிய வருமான ஒரே தமிழரான தமிழ் ஈழம் – உடுவிலை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் செல்லையா இரத்தின சபாபதி அவர்கள் தனது நூறாவது பிறந்த தினத்தை திருகோணமலையில் உள்ள அவரது தங்கு விடுதியில் கொண்டாடினார்.

ஆனந்தாக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்  இந்துக் கல்லூரி களில் கல்வி பயின்ற போதும் அவரது விளையாட்டுப் போக்கினால் பெற்றோருக்கும் இவருக்கும் ஒத்து வராத காரணமாக  வீட்டை விட்டுப் புறப்பட்டு பதினெட்டுப்  பேர்களில் ஒருவராக பிரித்தானியா விமானப் படைக்கு தெரிவு செய்யப்பட்டு 1941ம்.ஆண்டு இலண்டனுக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு அவர் பெயர் சி. கே. பதி என மாற்றப்பட்டது. மேலாதிகப் படிப்பிற்காக ஒரே ஒரு தமிழராக கனடாவிற்கு அனுப்பப்பட்டார். படிப்பு முடிந்தபின் மறுபடியும் இலண்டன் வந்து பின்னர் யுத்தத்தில் பணி புரிந்தபோது மிகவும் கடினமான விமானங்களை ஒட்டி, சாதனை புரிந்தார்.

ஒரு சமயம்  பிரான்ஸ் கடற்கரை ஓரமாக ஒரு ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலை மூழ்கடித்து சாதனை படைத்தார். 1944ம் ஆண்டு போர் பதக்கம் கிடைக்கப் பெற்று கௌரவிக்கப்ப்ட்டார்   போர் முடிவிற்கு வந்த பின்பு இங்கிலாந்தில் கடல் பிராந்திய காவல் துறையில் சில காலம் பணி புரிந்து விட்டு தாயகமான இலங்கைக்குத் திரும்பினார்.

இங்கு இந்திய விமான சேவையில் கப்டனாக 27 வருடங்கள் பணியாற்றினார். ஓய்வு பெற்றபின்பு சில காலம் இலங்கை விமானத் துறையில் பணியாற்றிவிட்டு திருகோணமலையில் உள்ள நிலாவெளியில் ஒரு விடுதியை ஆரம்பித்து நடத்திவருகிறார்.

இது போல பல தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் அன்று முதல் இன்று வரை வெளிநாடுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து, பல்வேறு விசேட பதவிகளை புரிந்து, பேரோடும் புகழோடும் இலை மறை காய்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இனம் கண்டு, பழைய பதிவுகளை ஆராய்ந்து, தற்போதுள்ளோரை கண்டுபிடித்து ஆவணப் படுத்த வேண்டிய கடமை எங்கள்  தலைமுறைக்கு உண்டு!