April 24, 2024

நாலுபேருடன் உலா வந்த நல்லூர் கந்தன்!

காலத்தின் தேவையறிந்து வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , முன்னதாக ஆறுமுக சாமி மஞ்சள் அலங்காரத்தில் உள்வீதி உலா வந்தார்.

அதனை தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி , தெய்வானை சமேதரராய் , சிறிய தேரில் ஆரோகணித்து , உள்வீதியுலா வந்தார்.

கொரோனோ பெருந்தொற்று காரணமாக இம்முறை ஆலய வருடாந்திர மகோற்சவம் பக்தர்களின் பங்கேற்பின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் இடம்பெற்று வருகின்றன.

அதனால் இம்முறை தேர் திருவிழாவின் போது தேர் இழுக்காது ,  வேல் பெருமான், வள்ளி , தெய்வானையுடன் உள்வீதியில் சிறிய தேரில் ஆரோகணித்து அருள்காட்சி அளித்தார்.

இதனிடையே ஆலய வெளி வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் நல்லூர் ஆலயத்தின் புனிதத்தை பேணும் முகமாக தமது பாதணிகளை கழற்றி கடமை புரிந்ததாக யாழ்ப்பாண அரச தொலைக்காட்சி புளங்காகிதம் அடைந்துள்ளது.

யாழ்ப்பாண போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ மற்றும் பொலீஸ் உயரதிகாரிகள் நல்லூர் ஆலய வளாக வெளிவீதியில் செல்லும் போது தமது காலணிகளை கழற்றி வெறும் காலோடு ஆலய தமது கடமை புரிந்தமை வரவேற்கத்தக்க விடயம் என அரச ஆதரவு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.