April 19, 2024

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளருக்கு போட்டி!


தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு நாளை (02) காலை 10 மணிக்கு, நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக பதவி வகித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா, அண்மையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து, தவிசாளர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில், நாளை நடைபெறவுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – 7 ஆசனங்களைக் கொண்டுள்ளது. சுயேட்சைக் குழு – 4 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 ஆசனங்களையும், சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா 1 ஆசனத்தையும் கொண்டுள்ளன.

இங்கு அறுதிப் பெரும்பான்மை பெற கூட்டமைப்புக்கு 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், சுயேட்சைக் குழு, இம்முறை தமது சார்பில் ஒருவரை முன்மொழியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த மூன்று தரப்புகளும் இணைந்தாலும் கூட, 7 ஆசனங்களைத்தான் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ந்த நிலையில், வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவில் ஈபிடிபி முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து டெலோ கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்துள்ளதால், அவரது சார்பு உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை .

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.