April 25, 2024

நினைவுகூர்ந்தார் சிவாஜிலிங்கம்!!

வல்வைப் படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பலரும் மறந்துள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கதின் தனது அலுவலகத்தில் நினைவேந்தியுள்ளார்.

வல்வெட்டித்துறை பகுதியில் 1989 ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்களையும் நினைவு கூரும் நிகழ்வே வல்வைப் படுகொலையாகும்.

1989 ஆம் ஆண்டு 08 ம் மாதம் 02 ம் திகதி வல்வெட்டித்துறையில் தமிழீழ புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையில் நடந்த மோதலில் 09 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்தனர்.

அதனை அடுத்து, 2 ஆம், 3 ஆம், 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் பொதுமக்களை வகைதொகையின்றி படுகொலை செய்தனர்.  குறித்த நாட்களில் 63 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 100 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். அப்பகுதி மக்களின் 123 வீடு முற்றாக எரித்து சாம்பல் ஆக்கப்பட்டன.  45 கடைகள் முற்றாக சூறையாடப்பட்டன. 175 மீன் பிடி வள்ளங்கள் முற்றாக எரித்தழிக்கப்பட்டன என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.