April 24, 2024

93 நாட்களின் பின்னர் குற்றமில்லையென கண்டுபிடித்த ரிஜடி!

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர், முல்லைத்தீவில் ஒருவர் என

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சுமார் 93 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐவரையுமே வழக்கு தொடர குற்றச்சாட்டுக்கள் இல்லையென தெரிவித்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவு புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் இன்று விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாததால் வழக்கை தொடர முடியவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்பையில் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி 24 மணித்தியாலத்தில் இவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அதிகாலை வேளை அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மறுவாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரும் அடங்கினார்.

கடந்த ஏப்ரல் மாத முற்பகுதியில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் இந்திய உளவுத்துறை வழங்கிய தகவலையடுத்து சந்தேகத்தின் அடிப்படையிலேயே நால்வரும் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 3 மாதங்களின் பின்னர் சந்தேக நபர்கள் ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாததால் வழக்கை தொடர முடியவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனால் சந்தேக நபர்கள் ஐவரையும் வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.