April 19, 2024

தப்ப ஓடியவர்களிற்கு தனிமைப்படுத்தல்!

 

பருத்தித்துறை பகுதியில் தொற்று உள்ளான நிலையில் தப்பித்து சென்ற வெளிமாவட்ட வியாபாரிகள் தமது சொந்த இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை பகுதியில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து பருத்தித்துறை நகரை முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பருத்தித்துறை சந்தையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அறுவர் தமது சொந்த இடங்களுக்கு சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

முன்னதாக  பருத்தித்துறை நகர் பகுதி வியாபாரிகளுக்கு நேற்று முன்தினம் எழுமாறாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இந்நிலையில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 6 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் தங்கியிருந்த வீடுகளுக்குச் சென்று சுகாதார பரிசோதகர் பார்வையிட்ட போது அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதி சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.