April 24, 2024

இணையவழி கற்றலும் இரண்டாவது நாளாக முடக்கம்!

இலங்கையில் ஏற்கனவே பாடசாலைகள் மூடப்பட்டு வந்துள்ள நிலையில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்த  இணைய வழி கற்றலும் தடைப்படவுள்ளது.

இணையவழி கற்பித்தலில் இருந்து விலகுவதாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று(13) இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

கொரோனா தொற்று காரணமாக முன்னெடுக்கப்பட்டு வந்த இணைய மூலமான கற்பித்தலில் இருந்து நேற்று (12)  முதல் விலகுவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தத் தொழிற்சங்க போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், அதிபர் சேவையாளர் சங்கம் உள்ளிட்ட 23 சங்கங்கள் ஆதரவு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.