April 25, 2024

சுகாதார தொழிலாளிகளிற்கு கொரோனா வராது?

 

வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் புள்ளிவிபரங்களில் கதை விட்டுவருகின்ற போதும் முன்கள சுகாதார பணியாளர்கள் தொடர்பில் யாரும் கண்டுகொள்ளாதிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையினுடைய சுகாதாரச் ஊழியர்கள் ஜனாதிபதியின் உடைய வர்த்தமான அறிவித்தலுக்கு அமைய பயண கட்டுப்பாட்டு காலங்களில் கிருஸ்ணபுரம் கொரோனா வைத்திய சாலையில் தங்கியிருந்த நோயாளிகளின் கழிவுகளை தினமும் அகற்றினர். இன்றுவரை அது தொடர்கிறது. அவர்களுடைய குடும்பங்கள் தங்களுடைய கணவன்மாரை ,பிள்ளைகளை குறித்த வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு தனது குடும்பத்திற்கு நோய் வருமா என்று துக்கத்துடன் வாழ்கிறார்கள் .அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி இன்றுவரை வழங்கப்படவில்லை. பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியிடம் கேட்டபோது மேலிடத்திலிருந்து அனுப்பப்படும் பட்டியலுக்கு ஊசி வழங்கப்படும் என்கின்றார் .சிற்றூழியர்கள் அவர்களது குடும்பங்கள் துயர் அடைந்துள்ளார்கள் .பொறுப்பற்ற சுகாதார சேவை  செயலை தவிசாளர் என்றவகையில் சுட்டி காட்டினேன் .எதிர்வரும் காலங்களில் பார்க்கலாம் என்றார்  கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் என தெரிவித்துள்ளார் கரைச்சி தவிசாளர் வேழமாலிதன்.

ஆடைத்தொழிற்சாலைக்கு ஓடோடி சென்று ஊசி போட்ட பணிப்பாளரையே வேழமாலிதன் நீதி கேடடுள்ளார்.

இதனிடையே யாழ் மாவட்டத்தில் 2ஆம் கட்டத்தின்  முதலாவது தடவை தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த யூலை மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் யூலைமாதம் 5ஆம் திகதி முதல்நாளில் யாழ் மாவட்டத்தில் 9,465 பேருக்கும், 6ஆம் திகதி இரண்டாம் நாளில் 9இ457 பேருக்கும், 7ஆம் திகதி மூன்றாம் நாளில் 12,034 பேருக்கும், 8 ஆம் திகதி நான்காம்  நாளில் 7,497 பேருக்கும் என மொத்தமாக 38,456 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசியேற்றும் பணிகள் யூலை மாதம் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும்.

மேலும், 18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்துநிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், அத்துடன் முன் களப் பணியாளர்களாக உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியுமென வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.