März 29, 2024

உலக நாடுகளின் அவசரம்… உரிய விலை கொடுக்க நேரிடும்: உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் பெரிய விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் எச்சரித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை. பல்வேறு நாடுகள் அடுத்தடுத்த அலைகளைச் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், பிரித்தானியா ஜூலை 19 முதல் பல்வேறு தளர்வுகளை அறிவிக்க உள்ளது. கொரோனா பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை. ஆகையால், மக்கள் வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, பேஸ்புக் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான்,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அமெரிக்க மாகாணங்களில் வாரந்தோறும் சுமார் 10 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒரு வாரத்துக்கு 5 லட்சம் பேருக்காவது தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் நம்மை விட்டுச் சென்றுவிட்டதாக எண்ணக் கூடாது.

தொற்றுப் பரவல் இன்னும் முடியவில்லை. ஆனாலும், கொரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

அதற்கான விலையை நாம் செலுத்த வேண்டியிருக்கும். இதே போக்கு தொடர்ந்தால், கொரோனா வைரஸின் புதிய அலை வெகு விரைவில் ஏற்படலாம் என்று மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.