April 19, 2024

கோத்தபாய கீழ் இறங்கியுள்ளார்?

இறங்கிவரமாட்டார் என சொல்லப்பட்ட கோத்தபாய தொழிற்சங்க போராட்டங்கள் காரணமாக கீழே இறங்கி வந்துள்ளார்.

தாதிய தொழிற்சங்கங்களது தொடர்போராட்டத்தை அடுத்து கோத்தபாய கீழ் இறங்கியுள்ளார்.

பதவி உயர்வு, தாதியர் சட்டத்தை மறுசீரமைத்தல் உட்பட 7 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தாதியர் சங்கம்  நாடு முழுவதுமுள்ள அரச வைத்தியசாலைகளில் நேற்று (2) முதல் தொடர்ந்த போராட்டத்திற்கு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ  05 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதில் ஒன்றிணைந்த அரச சேவை தாதியர் சங்கம், அரச தாதியர்கள் சங்கம், அகில இலங்கை தாதியர் சங்கம் ஆகிய பிரதான மூன்று தாதியர் தொழிற்சங்களின் தீர்மானத்தின் பிரகாரமே தாதியர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச சேவைக்கான ஐக்கிய தாதியர் சங்கத்துடன் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி,

01. தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுதல்.

02. நல்லாட்சியின் காலத்தில் 07.12.2017 மற்றும் 32/2017 ஊடாக நிறுத்தப்பட்ட ஊழியர்களின் நிலையை மீண்டும் பெற்றுக் கொடுத்தல்.

03. இடைநிறுத்தப்பட்டுள்ள தரம் III இல் இருந்து தரம் II க்கான பதவி உயர்வை ஐந்து வருடங்களுக்கும், தரம் II இல் இருந்து தரம் I க்கு ஏழு ஆண்டுகள் பதவி உயர்வு வழங்கல்.

04. 20 ஆயிரம் ரூபாய் வருடாந்த சீருடை கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தல்.

05. தற்போது 36 மணித்தியாலங்களாக காணப்படும் வேலை நேரத்தை வாரத்திற்கு 05 நாட்களாக

( 30 மணித்தியாலங்கள்) கருதி, விசேட குழுவிற்கு ஆய்வுக்கு அனுப்புதல்.

குறித்த 5 விடயங்களை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ஏனைய இரு கோரிக்கைகளையும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது நிறைவேற்றவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது