April 23, 2024

ராஜபக்சா சகோதரர்களின் தோல்வி நாட்டு மக்களுக்கு நல்லதைத் தரும் என்கிறார் சம்பிக ரணவக்க எம்.பி

இலங்கையின் அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு தற்போது அரசியல் பீடங்களில் ராஜபக்சாக்களே வீற்றிருக்கின்றனர். சகோதரர்கள், அவர்கள் பிள்ளைகள் என இலங்கை அரசியலில் புகுந்து பதவிகளைப் பலவந்தமாகப் பெற்று தற்போது அனைத்து சலுகைகளையும் சுகபோகங்களையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் இணைந்து செய்யும் அநியாய அரசியலால் தற்போது ஆபத்து ஏற்படும் சூழ்நிலை தோன்றியுள்ளது. ஆனால் இது நாட்டு மக்களுக்கு நல்லது.

ராஜபக்ஷாக்களுக்களுக்கு எதிரான எதிர்காற்று நாட்டில் சகல திசைகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. அவை வெகு விரைவில் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான அரசியல் சூறாவளியாக மாற்றமடையும். அதற்கு தலைமை தாங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

பஷில் ராஜபக்ஷவுக்கு எந்த அமைச்சு பதவியை வழங்கினாலும் அவரால் எதனையும் செய்ய முடியாது என்பது மூன்று மாதங்களிலேயே வெளிப்படும். ராஜபக்ஷாக்கள் நாட்டுக்கு சாபமாகும் என்றும் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் கொவிட் ஒழிப்பு செயற்பாடுகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை முகாமைத்துவம் செய்ய முடியாத ராஜபக்ஷாக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அரசியல் எதிர்ப்பு புயலொன்று அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

அன்று மஹிந்த காற்றைப் பற்றி கூறினார்கள். இன்று ராஜபக்ஷாக்கள் இனி வேண்டாம் என்று கூறி மக்களின் எதிர்காற்று ஆரம்பமாகியுள்ளது. சகல துறைகளிலும் ராஜபக்ஷாக்களுக்கு வாக்களித்தவர்கள் இன்று அவர்களது செயற்பாடுகளில் அதிருப்தியடைந்து அவர்களுக்கு எதிரான எதிர்ப்புகாற்றுடன் ஒன்றிணைந்துள்ளனர்.

நாட்டில் தொழில்புரியும் பிரஜைகள் 80 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 14 – 26 இலட்சத்திற்க இடைப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர். 40 இலட்சம் பேர் சுயதொழிலில் ஈடுபடுபவர்களாவர். இந்த 40 இலட்சம் மக்களும் இன்று புதிய பாவப்பட்ட ஏழை குழுவினராகியுள்ளனர். இலங்கையின் வறுமை நிலையை 6 வீதம் வரை குறைப்பதற்கு எம்மால் முடிந்தது. ஆனால் முறையற்ற கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கடந்த ஏப்ரலில் தாய் நாடான அமெரிக்காவிற்கு சென்றிருந்த பஷில் ராஜபக்ஷ தற்போது சுற்று பிரயாணமாக நாடு திரும்பியுள்ளார். அவர் தாய் நாடு செல்ல முன்னர் இலங்கையில் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராகக் காணப்பட்டார். ஆனால் எவ்வித நிதி முகாமைத்துவமும் இன்றி நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடிக்கு பஷில் ராஜபக்ஷ நிச்சயம் பொறுப்பு கூற வேண்டும்.

எனவே தற்போது அவருக்கு நிதி அமைச்சு மாத்திரமல்ல, எந்த அமைச்சை வழங்கினாலும் அவரால் எதையும் செய்ய முடியாது. அமைச்சு பதவியை வழங்கி 3 மாதங்களுக்குள் அதனை கண்டுகொள்ளலாம். பஷில் மாத்திரமல்ல. எந்தவொரு ராஜபக்ஷவுக்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று நாம் ஏற்கனவே கூறினோம்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது யுத்த வெற்றியை பெரிதாக பிரசாரம் செய்து அவர் அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து விடுவார் என்று கூறினார்கள். அவரின் தோல்வியை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷவே அவரின் பின்னாலிருந்து யுத்தத்தை நிறைவு செய்ததாக கூறினார்கள். தற்போது அவரும் தோல்வியடைந்துள்ளதால் பஷில் ராஜபக்ஷவைக் கூறுகின்றனர். எதிர்வரும் 3 வருடங்களில் நாமல் ராஜபக்ஷதான் தேர்தல் வெற்றிக்கு காரணம் என்று கூறுவார்கள்.

இவ்வாறு ராஜபக்சா குடும்பத்து உறுப்பினர் பொய்களைப் பேசிப் பேசி நாட்டை பாதாளத்திற்குள் தள்ளிவிடப்போகின்றார்கள். எத்தனையோ நேர்மையான அரசியல்வாதிகள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த போதும் இந்த பொய்யான அரசியலைச் செய்யவென ஒரு கூட்டுக் குடும்பம் இலங்கையின் ஆட்சி பீடத்தைக் கைப்பற்றி மக்களை ஏமாற்றுகின்றது. இதற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்