இந்திய குடியரசு தினவிழாவில் கனடா இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்

அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு தினவிழா என்சிசி முகாமில் பங்கேற்க, 25 நட்பு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் குழு அழைக்கப்படவுள்ளனர்.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தலைநகர் தில்லி தேசிய மாணவர் படையினரின் (என்சிசி) சிறப்பு முகாம் நடைபெறும். இதில் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் பங்கேற்பர். குடியரசு தின விழா அணிவகுப்பு முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் என்சிசி மாணவர்கள் பங்கேற்பர்.

என்சிசி மேற்கொண்ட இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் வங்கதேசம், நேபாளம், பூட்டான், ரஷ்யா, கஜகஸ்தான், சிங்கப்பூர், கிர்கிஸ்தான் குடியரசு, இலங்கை, மாலத்தீவு மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், இந்தாண்டு குடியரசு தினவிழா என்சிசி முகாமில் பங்கேற்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரேசில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மொரீசியஸ், மொசாம்பிக், நைஜீரியா மற்றும் செசல்ஸ் ஆகிய மேலும் 15நாடுகளில் இருந்து இளைஞர் குழுக்கள் முதல் முறையாக அழைக்கப்படவுள்ளனர்.

இந்திய விடுதலையின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இவர்கள் அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு தினவிழாவுக்கு அழைக்கப்படவுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 10 மாணவர் படையினர் / இளைஞர்கள் தங்களின் மேற்பார்வையாளர்களுடன் கலந்து கொள்வர்.

2022 ஜனவரி 15ம் தேதி முதல் ஜனவரி 29ம் தேதி வரை இவர்கள் இந்தியாவில் தங்கி, குடியரசு தினவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.