April 20, 2024

சீனர்கள் ஆமி உடுப்பினை போடவேண்டாம்:கமல் குணரட்ண?

இலங்கையின் திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது.

எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன நாட்டின் இராணுவச் சீருடையுடன் அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

இதனையடுத்து, திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாகப் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சீன தூதரகத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குபதிலளித்துள்ள சீனத் தூதரகம், குறித்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று விளக்கமளித்துள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் அவ்வாறான இராணுவச் சீருடையை அணிய வேண்டாம் என்று குறித்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தும்படி, பாதுகாப்பு செயலாளர் சீனத்தூதரகத்திடம் கோரியுள்ளார்.