April 25, 2024

குருநகர் முடக்கம்:நாகவிகாரையில் அமைச்சர்!

 

யாழ்ப்பாணத்தின் அதிக மக்கட் செறிவுமிக்க குருநகர் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த ஒருவாரத்தில் சுமார் 125 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இரு கிராம சேவகர் பிரிவுகளையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வடகிழக்கிலுள்ள பௌத்த விகாரைகளில் பொசன் அனுட்டானங்கள் அமைச்சர்கள் சகிதம் உச்சம் பெற்றுள்ளது.

கொரோனா தொற்று நாட்டை விட்டு நீங்க வேண்டி விசேடமாக இலங்கையின் எட்டுத்திசையிலும் உள்ள விகாரைகளில் 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை இரவு 108 தீபங்கள் ஏற்றி பிரித் ஓதி பிக்குகளுக்கு தானம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் நாக விரையிலும் இடம்பெற்றுள்ளது.

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் உள்ள விகாரைகளில் இந்த வழிபாடு இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி ,யாழ் மாவட்ட செயலர்; கணபதிப்பிள்ளை மகேசன் ,யாழ்ப்பாண பிரதேச செயலர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.