April 20, 2024

அரசியல் கைதிகள் அஞ்சலி!

மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு யோசேப் ஆண்டைக்கு தமிழ் அரசியல் கைதிகள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

அவருக்கு அஞ்சலி செலுத்தி சிறையிலிருந்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அரசியல் கைதிகளினது விடுதலைக்காக இடையறாது குரல் கொடுத்து வந்தவர் முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு யோசேப் ஆண்டை என தமிழ் அரசியல் கைதிகள் நிiவுகூர்ந்துள்ளனர்.

இதனிடையே நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகளாவே இருப்பார்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளரான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,அரசியல் அகதிகள் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கான காரணம் ஒட்டுமொத்த அரசியல் தமிழ்த் தலைமைகளுமே.! சிவில் சமூகங்கள் பொறுப்பேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

அதாவது அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. கடந்த ஆட்சிக்காலத்தில் தீர்த்திருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில் இதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. தமிழ் அரசியல் தலைமைகளால் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசியல் தலைமைகள் கொரோனாவினை காரணம் காட்டுகிறார்களே தவிர அரசியல் கைதிகளை பார்ப்பதனையோ, அன்றாட தேவைகளையோ கவனிப்பதும் இல்லை.

அரசியல் கைதிகள் தமது கோரிக்கையை, அரசாங்கத்திடம் வைப்பதா? அரசியல் தலைமைகளிடம் வைப்பதா? சிவில் சமூகத்திடம் வைப்பதா? பொது மக்களிடம் வைப்பதா? என தெரியாது அரசியல் அகதியாகவும், அரசியல் அநாதைகளாகவும் இருக்கின்றார்கள் என்றார்.