März 28, 2024

ஸ்ரீலங்காவுக்கு எதிராக எவரும் வாள் வைத்திருப்பதனை விரும்பவில்லை!

பலவந்தமாக நல்லிணக்கத்தை அடைய முடியாது என்று வெளிவிவகார செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் அவர் பேசியதாவது,

மேற்குலகிடமிருந்து வரும் மனித உரிமை குற்றச்சாட்டுகள் முற்றுமுழுதாக நியாயப்படுத்த முடியாதவையாக காணப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் நல்லிணக்கத்துக்கு உதவப்போவதில்லை. மாறாக இது எங்களை பிளவுபடுத்த முயல்கின்றது.

எங்களுக்கு எதிராக எவரும் வாளைவைத்திருப்பதை விரும்பவில்லை, பலவந்தமாக நல்லிணக்கத்தை அடைய முடியாது. அது சமூகத்திலிருந்து உருவாகவேண்டும். மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எங்களை நியாயப்படுத்துவது எங்கள் இலக்கு இல்லை.

இதேவேளை, எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அமைச்சரவை ஆராயும். எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பான மீளாய்வு குழு சமர்ப்பித்த அறிக்கை புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

மீளாய்வு குழு தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல விடயங்களை கேள்வியாக எழுப்பியுள்ளது. இந்த கேள்விகளுக்கு விடைகளை காணவேண்டும்.

மீளாய்வுகுழுவின் அறிக்கை புதிய அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும், அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரினதும் கருத்துக்கள் பெறப்படும், அது முடிவடைந்ததும் மீளாய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்போம்.

நாடாளுமன்றம் இணக்கப்பாட்டினை காண்பது குறித்து விவாதிக்கும். அது என்ன இணக்கப்பாடு என்பது எங்களுக்கு தெரியாது என்றார்.