März 28, 2024

கொரோனா:வாடகை நிலுவை கேட்கும் யாழ்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அடிப்படை உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பல்கலைக்கழக பேரவையிடமும் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர். மேலும்,

“கொரோனோ அபாய காலத்தில் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறாததால் விடுதிகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கியிருந்த மாணவர்கள் வெளியேறியிருந்த நிலையில் தற்போது அதற்கான வாடகைகளை தருமாறு உரிமையாளர்கள் கோருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் மிகவும் வறுமைக்குட்ப்பட்ட மாணவர்களே கல்வி கற்கின்ற நிலையில் இந்த வாடகைகத் தொகையைக் கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கான தீர்வொன்றையும் வழங்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என பல இடங்களிலும் இருந்து வந்து கல்வி கற்கின்ற மாணவர்கள் மிக வறுமை நிலையிலையே உள்ளனர். அதே நேரம் பல்கலைக்கழகத்திலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இவற்றைக் கருத்திற் கொண்டு சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் உரிய நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென்றும்” எனவும் மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.