März 28, 2024

கிழக்கு மக்களுக்காக உயிரையும் கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன்! இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

மாற்றுவழி அரசியல் பாதையூடாகத்தான் கிழக்கு மக்களின் அரசியல் இருப்பை பாதுகாக்க முடியும் என்ற தூரநோக்கில் வெற்றிபெற்றுள்ளோம். கிழக்கில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியைபெற்றுக்கொடுக்க அமைச்சர்கள் இல்லை இதற்கான பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனக்கு மட்டக்களப்பு மக்கள் தந்த ஆதரவுக்கு விசுவாசமாக சேவைசெய்யவுள்ளேன் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு மாத்திரமின்றி அம்பாறை, திருமலை மக்களுக்காகவும் என் உயிரை அர்ப்பணித்து 24 மணித்தியாலங்களும் சேவை செய்ய தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரேயொரு வேட்பாளர் நான் மாத்திரமே இது சாதாரண வெற்றி அல்ல இவ்வெற்றியின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள்.

முக்கியமாக இரு பொறுப்புக்கள் எனது தலையில் சுமத்தப்பட்டுள்ளன. தபால்துறை, ஊடகம். தபால் துறையைப் பொறுத்த வரை நாட்டில் 26ஆயிரம் ஊழியர்கள் வேலைசெய்கின்றார்கள்.

3610 உப தபாலகங்களும், 650 பிரதான தபாலகங்களும் உள்ளதுடன் தபால் ஊழியர்களிடையே பெரும் தொழிற்சங்கமும் உள்ளது. இவர்களின் தேவைகளை நிறைவேற்ற நிச்சயமாக பாடுபடுவேன்.

ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களும் அர்ப்பணிப்புடன் சேவை செய்கின்றனர். ஊடகவியலாளர்களை மாவட்ட மாகாண தேசியரீதியாக சந்தித்து கலந்துரையாடி அவர்களின் தேவைகளை நிறைவேற்றவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.