März 28, 2024

ஒரே நாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலி! மேலும் 5860 பேருக்கு இன்று தொற்று!

 

தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், கர்நாடகா, டெல்லி, கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 30 பேர் உட்பட தமிழகம் முழுவதும் இன்று 5,860 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 லட்சத்து 32 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 5,236 பேர் உட்பட இதுவரை 2,27,251 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்சமாக இன்று தனியார் மருத்துவமனைகளில் 44 பேர் அரசு மருத்துவமனையில் 83 பேர் என மொத்தம் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 5,641ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் 54,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 10 நாட்களுக்குப் பிறகு 2ஆவது நாளாக இன்று ஆயிரத்துக்கும் அதிகமாகத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, இன்று 1,179 பேர் உட்பட இதுவரை 1,15,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.