März 29, 2024

ரணிலிடம் காட்டிய விளையாட்டை சஜித்திடம் காட்ட முடியாது

ரணிலை பலவீனப்படுத்தியதை போன்று சஜித்தையும் பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

சீனக்குடா பகுதியில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினரை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏழு தேசிய பட்டியல் உறுப்பினர்களே கிடைத்திருந்தது. இதற்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக எமது பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி சுமூகமான முடிவுக்கு வரமுடிந்துள்ளது.

ரணிலால் சிறுபான்மை கட்சியினரை மீறி எதுவும் செய்யமுடியாது என ரணிலை பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் எவ்வாறு பலவீனப்படுத்தினார்களோ அதேபோன்று சஜித் பிரமதாசவையும் பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சியாகவே தேசியப்பட்டியல் தொடர்பாக அண்மையில் தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் காணப்படுகின்றன.

இது எமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்காளி கட்சி தலைவர்களும் பேச்சுவார்தை மூலம் முடிவுகாணும் விடயம். ஆனால் பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்காக கடந்த நாட்களில் முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுடன் டீல் வைத்துக்கொண்ட சில உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச தொடர்பாக அவரை பலவீனப்படுத்தும் நோக்கில் தெரிவித்த கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.

ராஜபக்க்ஷக்களுடன் டீல் வைத்துக்கொண்டு சஜித் பிரேமதாசவுக்கு சேறுபூசும் நடவடிக்கையை மேற்கொண்டுவரும் இந்த உறுப்பினர்கள் ரணிலிடம் காட்டிய விளையாட்டை சஜித்திடம் காட்ட முடியாது.

சஜித் பிரேமதாச தலைமையில் சிறுபான்மை கட்சிகளையும் இணைந்துகொண்டு அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொண்ட அரசை விரைவில் அமைப்போம். அதற்கு தடையாக உள்ள இவ்வாறான உறுப்பினர்கள் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.