April 19, 2024

மாவை – சுமந்திரன் இரவு வேளையில் யாழில் திடீர் சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றிரவு திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இருவரும் நேற்றிரவு யாழ். நகரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ். நகரிலுள்ள மருத்துவர் ஒருவருடைய விடுதியில் இருவரும் சந்தித்து நேற்றிரவு 10 மணிக்கு மேலாகப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலத்தில் உருவாகியிருந்த முரண்பாடுகள் தொடர்பில் இருவரும் விரிவான முறையில் இதன்போது பேசியதாகவும், சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நாளை சனிக்கிழமை திருகோணமலையில் கூடவிருக்கும் நிலையில் இந்த சமரச முயற்சி இடம்பெற்றிருக்கின்றது.