März 28, 2024

இன்று கல்முனை மக்கள் போர்க்கொடி! மு.பா.உ கோடீஸ்வரன் தலையிட்டதும் தீர்ந்தது பிரச்சினை என்கிறார் உறுப்பினர் ராஜன்….

கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் வாழ வழியின்றி கஸ்ட்டப்படும்போது குப்பைவரி அறவிடுவது நியாயமா? மக்களின் நியாயமான பிரச்சினைக்கு இன்று தீர்வுகாணப்பட்டுள்ளது.

அதற்காக மேயருடன் பேசி தீர்வைப்பெற்றுத்தந்த முன்னாள் எம்.பி.கோடீஸ்வரனுக்கும் போர்க்கொடி தூக்கிய மக்களுக்கும் நன்றிகள். இவ்வாறு கல்முனை மாநகரசபையின் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் களத்தில் நின்று கருத்துரைக்கையில் குறிப்பிட்டார். கல்முனை குவாறிவீதியில் இன்று(17) ஞாயிற்றுக்கிழமை குப்பை அள்ளவந்த மாநகரசபை ஊழியர்கள் 50ருபா குப்பைவரிதருமாறும் தராவிட்டால் குப்பை அள்ளமாட்டோம் என்றதும் பிரச்சினை கிளம்பியது. அதனையடுத்து பொதுமக்கள் ஆண்டுவரி செலுத்தியபின்னரும் நாளாந்த வரி எதற்கு? அதுவும் இன்றைய கொரோனா காலகட்டத்தில் குப்பைவரி தேவையா? என்று போர்க்கொடி தூக்கினர்.

சம்பவமறிந்து மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் விரைந்தார். கூடவே முன்னாள் எம்.பிகே. கோடீஸ்வரனும் அழைக்கப்பட்டார். அவரும் வந்து சேர்ந்தார். மக்களிடம் பிரச்சினையைக் கேட்டறிந்த மு.பா.உ. உடனடியாக மாநகரசபை மேயர் எம்.ஏ.றக்கீப்புடன் தொடர்புகொண்டு பிரச்சினை தொடர்பாக பேசினார். இறுதியில் குப்பை வரி அறிவிடாமல் குப்பையை அள்ளுவது என்று முடிவானது.

அதனையடுத்து மக்கள் பிரச்சினையைக்கைவிட்டனர். ஊழியர்கள் குப்பைகளை ஏற்றிச்சென்றனர். அங்கு உறுப்பினர் ராஜன் மேலும் கருத்துரைக்கையில்: சாப்பிடக்கூட வசதியில்லாத நேரத்தில் குப்பைவரி அறிவிடுது மனிதாபிமானமற்றது. மேயரின் இச்செயற்பாடு மக்களை வேதனையடையச்செய்துள்ளது.

2018இல் பட்ஜெட் விவாதம் வந்தபோது குப்பைவரி அறிவிடுவது தொடர்பில் சபையில் பிரேரணைகொண்டுவரப்பட்டது. அப்போது நாம் அனைவரும் சேர்ந்து அதனை நிராகரித்தோம். எனினும் மேயர் தற்றுணிவில் அதனை நிறைவேற்றினார். அது மனிதாபிமானமற்ற செயல். பெரியபெரிய வர்த்தக நிறுவனங்களிடமிருந்து இன்னும் வரிகளை அறவிட்டு முடியவில்லை. இந்நிலையில் மக்களுக்கு இந்தச்சுமையை அதுவும் இக்காலத்தில் திணிப்பது முறையல்ல. என்றார்.