April 19, 2024

கசந்தது உறவு:சித்தர் துரோகி?

அரசாங்கத்தின் ஒட்டு குழுக்களாக செயற்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் போன்ற அமைப்பினருக்கு விடுதலைப் புலிகளின் போராட்டத்தை பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் இல்லை ஈழத் தமிழர் சுயாட்சி கழக கட்சியின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இதுவரை அக்கட்சியுடன் நெருங்கிய உறவை அனந்தி பேணி வந்திருந்தார்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசாங்கத்துடன் இணைந்து ஒட்டு குழுக்களாக செயல்பட்டு மக்களை துன்புறுத்திய ஆயுதக்குழுக்கள் தற்பொழுது தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் கிடையாது.

குறிப்பாக 2009ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அவ்வமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுப்பீர்களேயானால் அவர்கள் மீண்டும் புத்துயிர் பெற்று விடுவார்கள். எனவே அவர்களை அழிக்க வேண்டும் என கூறியவர் தான் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படும்போது குறித்த  அமைப்பு விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்படவுமில்லை.

அவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் அதாவது விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் தான் கூட்டமைப்பில் இணைந்தவர்கள் எனவே  தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியோ அல்லது அவர்களுடைய போராட்டம் பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் கிடையாது என அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.