April 24, 2024

லிபிய தலைநகரில் விமான நிலையம் மீது அகோர தாக்குதல்..!!

லிபிய தலைநகரில் விமான நிலையம் மீது அகோர தாக்குதல்..!!

லிபியாவில் தலைநகரில் இயங்கிவரும் விமான நிலையம் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில், விமானங்கள் மற்றும் எரிபொருள் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன.

கடந்த 2011-ம் ஆண்டில் லிபியாவை ஆட்சிசெய்து வந்த கடாபி கொல்லப்பட்ட பின்னர் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

அத்துடன் கிழக்கு, மேற்கு என்று இரு பிரிவாக லிபியா உடைந்தது. தலைநகர் திரிபோலி உள்ளிட்ட மேற்கு பகுதிகள், ஐ.நா. ஆதரவு பெற்ற நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த நிர்வாகத்தை துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன.

கிழக்குப் பகுதி, இராணுவ உயர் அதிகாரி காலிபா ஹிப்டருக்கு விசுவாசமான படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களை ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன.

இந்நிலையில், தலைநகர் திரிபோலியில் இயங்கி வரும் ஒரே ஒரு விமான நிலையமான மிடிகா சர்வதேச விமான நிலையம் மீது கிழக்குப் பகுதி படைகள் பீரங்கிகளால் சரமாரி குண்டு வீச்சு தாக்குதலை நடத்தின.

இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானங்கள் சேதம் அடைந்தன. அதில் ஒரு விமானம், ஸ்பெயின் நாட்டில் சிக்கித்தவிக்கும் லிபிய மக்களை அழைத்து வருவதற்காக புறப்பட தயார்நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த தாக்குதலில் விமான எரிபொருள் கிடங்குகளும் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.